இனம்-'திராவிடன்', மதம்-'நாத்திகன்': வீரமணி கோரிக்கை

திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிருபர்களிடம் வீரமணி கூறுகையில்,
தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திர கால்வாய்த் திட்டம், புராண கற்பனை கதைகளை காரணமாகக் காட்டி முடக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
இந்தத் திட்டத்தை மேலும் எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதற்கான பிரச்சாரத்தை இதுவரை மேற்கொண்டோம்.
வரும் ஜூன் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் ஒத்த கருத்துடையவர்களை கலந்து கொள்ள அழைக்கிறோம்.
பெரியாரின் 132வது பிறந்த நாளை சமூகப் புரட்சி நாளாக செப்டம்பர் 18, 19 தேதிகளில் டெல்லி பெரியார் மையத்தில் கொண்டாட உள்ளோம்.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், சமூக நீதிக் கண்ணோட்டத்தில், சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை பிரதமர் அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் இரண்டே இரண்டு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்கள் என காரணம் கூறி, அதற்கென ஒரு குழுவை நியமித்து, பரிசீலிக்கப்படும் என்ற முடிவு பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களே சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்கின்றனர். அவர்கள் சமூக நீதிக்கு விரோதமானவர்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications