குடிநீரில் கழிவு நீர்: வடசென்னையில் காலரா- ஜெயலலிதா புகார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குடிநீருடன் கழிவு நீர் கலப்பதற்கு முக்கிய காரணம் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டவுடன் அதை உடனடியாக சரிசெய்யாதது தான் என்றும்,
இது போன்ற சுகாதாரமற்ற குடிநீரை பருகியதன் காரணமாக தண்டையார் பேட்டை, புளியந்தோப்பு பகுதிகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வயிற்றுப் போக்கு, வாந்தி, பேதி, காலரா மற்றும் மர்ம காய்ச்சல் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு எழுந்துகூட நடக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்,
இந்த நோய்களினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழை, எளிய மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுவதாகவும், ஒரு பக்கம் நோயினால் பாதிப்பு மற்றொரு பக்கம் ஊதிய இழப்பு என இரட்டை துன்பத்திற்கு மக்கள் ஆளாக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், தண்டையார்பேட்டை அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன என்றும், ஒரே படுக்கையில் இருவரை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
குடிநீருடன் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தாத திமுக அரசைக் கண்டித்து வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் இரண்டு முறை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டும், அப்போதைக்கு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, நிரந்தரத் தீர்வு காணும் நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை.
எனவே, வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீருடன் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தாமலும், கழிவு நீர் அடைப்பை சரி செய்யாமலும் இருந்ததன் விளைவாக, காலரா மற்றும் மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்பட்டு அவதியுறுவதற்குக் காரணமான மைனாரிட்டி திமுக அரசைக் கண்டித்தும்,
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தியும், வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில், 5ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வேணுகோபால் எம்.பி. தலைமையிலும், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.