60% கீழ் தேர்ச்சி கண்ட அரசு பள்ளிகளுக்கு நோட்டீஸ்
சென்னை: பத்து மற்றும் பிளஸ்டூ தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி கண்ட அரசுப் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசின் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மாதம் 14 ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 26 ந்தேதியும் வெளியானது. பிளஸ் 2 தேர்வில் 85.2 சதவீதம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 82.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுவாக பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2 தேர்வுகளில் 60 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றதற்கான காரணங்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
தேர்ச்சி குறைவுக்கு அளிக்கப்படும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. அதற்குப் பதிலாக தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
தேர்ச்சி குறைவுக்கு தெரிவிக்கப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லாவிட்டால் இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்ச்சி குறைந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் சிறந்த பள்ளிகளை கவுரவிக்கவும் பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேர்வு செய்து ரூ.2 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களைக் கொண்டு தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.