மதுரையில் கடும் மின் தடை - சில நாட்களில் சரியாகும் என்கிறது மின்வாரியம்
மதுரை: மதுரையில் கடும் மின் தடை நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலைமை இன்னும் சில நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் நச்சாடலிங்கம் என்று கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மின்வெட்டு நிலவி வருகின்றது. இதனால் பொது மக்கள் பெரும் துன்பத்தில் தவித்து வருகின்றனர்.
இது குறித்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் நச்சாடலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த ஜனவரியில் காற்றாலை மூலம் மின் கட்டமைப்புக்கு கிடைத்த மின் உற்பத்தி மிகக் குறைவாக இருந்ததால், மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.
மே மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாகி 2,300 மெகாவாட் வரை மின் கட்டமைப்புக்கு கிடைத்து வந்ததால், கடந்த 27 ம் தேதி முதல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டது.
ஜூன் முதல் தேதி முதல் எதிர்பாராத நிலையில், காற்றாலை மின் உற்பத்தி 2,300 மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட்டாக குறைந்தது. இதனால், மின் கட்டமைப்பை காப்பாற்ற தற்காலிகமாக அதிகப்படியாக மின் தடை செய்யப்படுகிறது. இது தற்காலிகமானது தான்.
எனவே, காற்றாலை மூலம் மின் உற்பத்தி மற்றும் தென்மேற்கு பருவமழை சாதகமாக உள்ளதால் ஒரு சில நாட்களில் மின்தடை சரிசெய்யப்படும் என்றார்.