மும்பை விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு
மும்பை: மும்பை விமான நிலையத்தில் கடைசி நேரத்தில் இரு விமானங்கள் மோதிக் கொள்ளவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர்.
மும்பை விமான நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் மும்பை - சென்னை ஸ்பைஸ்ஜெட் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் கிளம்புவது தாமதமானது. விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த சமயத்தில், டெல்லி - மும்பை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமானம் கிளம்பாததால், கிங்பிஷர் விமானம் தரையிறங்க வேண்டாம் என அவசரம் அவசரமாக விமான கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது.
இதையடுத்து சிறிது நேரம் வானிலேயே வட்டமடித்த கிங்பிஷர் விமானம் பின்னர் தரையிறங்கியது.
இந்த சம்பவத்தை கிங்பிஷர் நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் விமானம் தரையிறங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications