திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்-அதிமுக
திருச்சி: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போலீசாரே அடிவாங்கும் நிலை உள்ளது.போலீசாருக்கே இந்த நிலை என்பதை நினைக்கும் பொது மக்கள் இனி வரும் காலத்தில் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சரும் மாநில எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான ஜெயக்குமார் கூறினார்.
திருச்சி மாநகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்தும், செயல்படாத மணிகண்டம் ஒன்றியக் குழுவை கலைத்து, மறுதேர்தல் நடத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஜெயக்குமார் பேசுகையில்,
திருச்சி மாநகராட்சியில் சாலை, சாக்கடை போன்ற 80 சதவீத அடிப்படை வசதிகள் மாநகராட்சி செய்து தரவில்லை. காவிரி கரையோர பகுதி மக்களே குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறுகின்றன. கடந்த இரு மாதத்தில் மட்டும் ஏராளமான போலீசார் கொல்லப்பட்டும், வெட்டப்பட்டும் உள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், ஜாதி மத கலவரமின்றி, சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு, ஸ்காட்லாந்து யார்ட் போலீசாருக்கு நிகராக தமிழக போலீசார் செயல்பட்டனர்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போலீசாரே அடிவாங்கும் நிலை உள்ளது.போலீசாருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களை யார் காப்பாற்ற முடியும்?.
உதாரணத்திற்கு, திருநெல்வேலியில் அமைச்சர்களின் கண் எதிரே எஸ்.ஐ. வெட்டிக் கொல்லப்பட்டார். அப்படி என்றால் பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?.
இந்த சம்வங்கள் மூலம் பொது மக்களும் சரி போலீசாரும் சரி, வரும் தேர்தலில் கண்டிப்பாக திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.