தமிழகம்: 'லைலா' தந்த காற்றாலை மின்சாரத்தை பறித்துச் சென்ற 'பெட்'!
இதனால் சென்னை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் மீண்டும் மிக அதிகமான மின்தடை ஏற்பட்டு வருகிறது.
வங்கக் கடலில் உருவான லைலா' புயல் மூலம் தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பலத்த காற்று வீசியது. ஆனால், அரபிக் கடலில் உருவான பெட் புயல் காரணமாக காற்றின் திசை மாறிவிட்டதால் காற்றாலை மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
லைலா புயல் ஏற்பட்டதையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
மேலும் தொழிற்சாலைகளுக்கான மின் உபயோகக் கடுப்பாடும் தளர்த்தப்பட்டது.
ஆனால், கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் மீண்டும் 4 மணி நேரம் முதல் 11 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, வாங்கபாளையம் பகுதிகளில் 11 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந் நிலையில், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் குறைந்துவிட்டதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்துக்கு காற்றாலை மூலமாக கடந்த மே 15ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை 2,000 மெகாவாட்டுக்கும் மேலாக மின்சாரம் கிடைத்ததால் முறைப்படுத்தப்பட்ட மின்சாரம் வழங்கப்பட்டது.
இது ஜூன் 1ம் தேதி 500 மெகாவாட்டாக குறைந்து, 3ம் தேதி 50 மெகாவாட்டாக குறைந்துவிட்டது.
இதனால், முறைப்படுத்தப்பட்ட மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையைச் சீர்படுத்த பிற மின் சந்தைகளில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தென்மேற்குப் பருவ மழை இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கவுள்ளதால், காற்றாலை மின்னுற்பத்தி சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்நிலைமையை கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான 'லைலா' புயல் மூலம் கிடைத்த தென் மேற்குப் பருவக் காற்று 'பெட்' புயல் காரணமாக திசைமாறி வடக்கு நோக்கி சென்றுவிட்டதால், தமிழகத்தில் காற்றாலைகள் மூலமான மின்சாரத் தயாரிப்பு தடைபட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.