என்டிடிவி செய்திப் படம்: தி்ரும்பப் பெற இலங்கை வலியுறுத்தல்!
இந்தியாவின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் என்.டி.டி.வி. சமீபத்தில் 'பிளட் ஆன் வாட்டர்' என்ற தலைப்பில் செய்திப் படம் ஒன்றை வெளியிட்டது.
இதில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம், என்டிடிவி நிர்வாகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
முகாம்களில் 30000 பேர் மட்டுமே உள்ளனர்:
அவர் தனது கோரிக்கையில், "மூன்று முதல் ஆறு லட்சம் வரையிலான மக்கள் முள்கம்பிகளிலான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் செனோய் வெளியிட்ட கருத்து அபத்தமானது. 30,000 பேர் மட்டுமே தற்போது இடம்பெயர் முகாம்களில் எஞ்சியிருக்கின்றனர்.
பேராசிரியர் செனோயின் கருத்து அவரது கல்வித் தகுதிகளுக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகவுள்ளது. முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திப் படத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பல காட்சிகள் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்டவை.
இந்த படத்தில் கருத்து வெளியிட்டுள்ள சில தமிழக மீனவர்கள் அப்பட்டமான பொய்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இலங்கை ராணுவத்தினர் 300 தமிழக மீனவர்களைப் படுகொலை செய்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.
இந்திய கடற்பரப்புக்குள் பிரவேசித்து இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைத் தாக்குவதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது.
பொருளாதார ரீதியாக நன்மை அடையும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரும் இலங்கைத் தமிழர்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களது புகலிடக் கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையிலேயே அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
என்.டி.டி.வி சேவை குறித்து இலங்கை மிகுந்த நன்மதிப்புக் கொண்டுள்ளது. என்.டி.டிவியின் சென்னைப் பிரிவு வெளியிட்டுள்ள இந்த செய்திப்படம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் தருவாயில் இவ்வாறான ஆக்கங்களை ஒளிபரப்புச் செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
உண்மையான தகவல்களை வெளியிடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications