மீண்டும் திமுகவில் என்.கே.கே.பி. ராஜா!: திமுகவில் இணையும் சின்னச்சாமி!!
சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.கே.கே.பி. ராஜா, அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அவர் மீது நில ஆக்கிரமிப்பு- ஆள் கடத்தல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்ததால் அமைச்சர் பதவிலியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந் நிலையில் பவானிசாகர் திமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியத்தை மிரட்டியதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும், பின்னர் திமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந் நிலையில் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளது திமுக. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்.கே.கே.பி. ராஜா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழக பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்று, அவரை நீக்கி வைத்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இன்று முதல் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமி திமுகவில் இணையவுள்ள நிலையில், இந்த முடிவை திமுக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வரும் 7ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளார் முத்துசாமி.