பெண் தீவிரவாதியை விடுவிக்காவிட்டால் சவூதி இளவரசர்கள், அமைச்சர்களைக் கடத்துவோம் - அல் கொய்தா
துபாய்: அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த பெண் தீவிரவாதியை சவூதி அரேபிய அரசு உடனடியாக விடுவிக்காவிட்டால் சவூதி இளவரசர்களையும், அமைச்சர்களையும் கடத்துவோம் எனஅல் கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ஹேய்லா அல் காசிர். இவர் மதபோதகர் ஹெய்லா அல் கசாயர் என்பவரின் மனைவி ஆவார். அல் கசாயர் 6 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி போலீசாரால் கொல்லப்பட்டார்.
அதன் பிறகு காசிர் அல்கொய்தா இயக்கத்தில் சேர்ந்தார். அவர் அந்த இயக்கத்துக்காக பெண்களை திரட்டினார். அதோடு அந்த இயக்கத்துக்கு சொந்தமான நிதியையும் இவர் தான் நிர்வகித்து வந்தார்.
இந்த நிலையில் காசிர் ரியாத் நகருக்கு அருகே சமீபத்தில் கைதானார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்துள்ள அல்கொய்தா அமைப்பு, சவூதி அரேபிய இளவரசர்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளது. இது தொடர்பாக ஒரு ஒலிநாடாவை அல் அரேபியா டி.வி.சேனல் ஒளிபரப்பி உள்ளது. அதில் அரேபிய தீபகற்ப பிரதேசத்தின் அல்கொய்தா இயக்கத்தில் 2-வது இடத்தில் இருக்கும் சயீத் அல் ஷேரி என்பவர் பேசி இருக்கிறார்.
சவூதி அரேபியாவின் இளவரசர்கள், அமைச்சர்கள், மற்றும் ராணுவ தளபதிகளை கடத்தி செல்ல எங்கள் இயக்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சவூதி சிறைகளில் இருக்கும் நம்மவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் கடத்தலில் ஈடுபட வேண்டி இருக்கும் என்று எங்கள் வீரர்களிடம் சொல்லி இருக்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.
இதையடுத்து சவூதி இளவரசர்கள், அமைச்சர்கள், தளபதிகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலியர்களை மணந்தோரின் குடியுரிமை ரத்து
இதற்கிடையே, இஸ்ரேலியப் பெண்களை மணந்துள்ள எகிப்தியர்களின் குடியுரிமையைப் பறிக்க எகிப்து அரசு முடிவு செய்துள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள ஆண்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேலிய பெண்களை திருமணம் செய்து கொண்டு உள்ளனர். அவர்களில் பலர் வேலை தேடி இஸ்ரேலில் குடியேறி உள்ளனர்.
இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு நாட்டு மக்களிடம் அதிகமாக இருப்பதால், ஒரு சிலர் அவர்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் இஸ்ரேலிய பெண்களை திருமணம் செய்து கொண்ட எகிப்தியர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், கீழ்க் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எகிப்து அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications