போபால் விஷவாயு வழக்கு: 8 பேருக்கு 2 ஆண்டு சிறை - ஜாமீனில் விடுதலை!!!
மேலும், இந்த எட்டு பேருரில் உயிரிழந்து விட்ட ஒருவரைத் தவிர மற்ற 7 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த கோர்ட், அவர்களுக்கு ஜாமீனும் வழங்கி விடுவித்துள்ளது. இதனால் போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் விரக்தியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.
1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கு போபால் கோர்ட்டில் கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் கிடைக்காமல் பெரும் அவலமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்தவழக்கில் இன்று நீதிபதி மோகன் திவாரி தீர்ப்பளித்தார். 85 வயதாகும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மகிந்திரா மற்றும் 7 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
அலட்சியப் போக்கால் மரணம் விளைவித்தல், கொலை அல்லாத மரணத்திற்குக் காரணமாக அமைந்தது, ஒட்டுமொத்த கவனக்குறைவு ஆகிய பிரிவுகளின் கீழ் 8 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டோர்
குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள கேசப் மகிந்திரா, மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவராக தற்போது இருக்கிறார்.
மகிந்திரா தவிர குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 7 பேர் விவரம்...
1. விஜய் கோகலே, யூனியன் கார்பைடு நிறுவன நிர்வாக இயக்குநர்.
2. கிஷோர் காம்தார், யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் துணைத் தலைவர்.
3. ஜே.முகுந்த், முன்னாள் ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு.
4. ராய் செளத்ரி, உதவி ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு (ஏற்கனவே இறந்து விட்டார்).
5. எஸ்.பி.செளத்ரி, முன்னாள் உற்பத்தி மேனேஜர், யூனியன் கார்பைடு.
6. கே.வி.ஷெட்டி, முன்னாள் உற்பத்திக் கலன் கண்காணிப்பாளர், யூனியன் கார்பைடு.
7. ஷகீல் குரேஷி, முன்னாள் உற்பத்தி உதவியாளர், யூனியன் கார்பைடு.
ஜாமீனும் அளித்தது கோர்ட்
எட்டு பேரையும் குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, உயிருடன் உள்ள 7 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அத்தோடு அனைவருக்கும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார்.
இதையடுத்து எழு பேர் சார்பிலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி 7 பேருக்கும் தலா ரூ. 25,000 ரொக்க ஜாமீன் அளித்து உத்தரவிட்டதால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை!
எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவரான அமெரிக்கரான வாரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.
போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் ஆண்டர்சன். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் அமெகரிக்காவுக்குத் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளார்.
அவர் தலைமறைவுக் குற்றவாளியாக இந்திய கோர்ட்டால் அறிவிக்கப்பட்டார்.
23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.