தொழிலாளர் ஸ்ட்ரைக்: ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுத்தம்- ரூ.65 கோடி நஷ்டம்!
சென்னை: ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் 150 பேர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஹூண்டாய் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2200 கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ரூ 65 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஹூண்டாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நிர்வாகம் கோரியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்களுடன் முன்பு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி, அங்கீகரிக்கப்படாத தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த சிலர், எச்.எம்.ஐ.இ.யு. சங்கத்தின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட 87 பேரில் 20 பேரை மட்டும் மீண்டும் பணியில் அமர்த்துவது என்று தமிழக தொழிலாளர் துறையின் தலையீட்டின் பேரில் முடிவானது.
ஆனால், நிறுவன சொத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய, மீதமுள்ள 67 பேரையும் பணியில் சேர்க்கக் கோரி எச்.எம்.ஐ.இ.யு. தற்போது கோருகிறது.
ஜுன் 8-ந் தேதியன்று (இன்று), தொழிலாளர் துறையினர் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே எச்.எம்.ஐ.இ.யு. உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளது.
இது ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அளித்த உத்தரவை மீறும் செயல் என்று ஹூண்டாய் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் 150 தொழிலாளர்கள் இன்று கார் அஸம்பில் செய்யப்படும் பகுதியில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக, 2,200 கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ரூ.65 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. எனவே, அரசு தலையிட்டு இதனை தீர்த்து வைக்க வேண்டும் என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications