விஜய் மல்லையாவை நீக்கிய சுப்பிரமணிய சாமி!
டெல்லி: ஜனதா கட்சியில் இருந்து கொண்டே மதசார்பற்ற ஜனதா தளம் மூலம் ராஜ்யசபா எம்பி பதவிக்குப் போட்யிடும் விஜய் மல்லையாவை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணிய சாமி.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதுபான- விமான நிறுவன தொழிலதிபரும், ஐ.பி.எல். பெங்களூர் அணியின் உரிமையாளருமான விஜய் மல்லையா ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்து வந்தார்.
இந் நிலையி்ல் இப்போது ராஜ்யசபா தேர்தலில் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மல்லையாவுக்கு பாஜகவும் மறைமுகமாக உதவுகிறது.
இந் நிலையில் எம்பி பதவிக்காக கட்சி மாறியதால் ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சுப்பிரமணிய சாமி அறிவி்த்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் மல்லையா கடந்த 2004ம் ஆண்டு ஜனதா கட்சியின் செயல் தலைவராக நியக்கப்பட்டார். ஆனால் அவர் தலைவர் பதவியில் செயல்படவே இல்லை. தூங்கிக் கொண்டிருந்தார். எனவே அவர் ஜனதா கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.
ஜனதா கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது. அதில் விஜய் மல்லையாவை கட்சி தலைவர் பதவி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும்.
கர்நாடக மாநில ஜனதா கட்சியும் கூண்டோடு கலைக்கப்படுகிறது. நடராஜை அமைப்பு செயலாளராக கொண்டு புதிய குழு அமைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்ததே சுப்பிரமணிய சாமியின் இந்த அறிக்கை மூலம் தான் பெரும்பாலான பத்திரிக்கையாளர்களுக்கே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.