டக்ளஸை கைது செய்யக் கோரும் வழக்கு ஒத்திவைப்பு
தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வழக்கறிஞருமான புகழேந்தி நேற்று முன் தினம் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த இலங்கை பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, அலுவல்ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.
இந்த வழக்கில் டக்ளஸ் கைது செய்யப்பட்டு, மாதங்களில் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
வெளியே வந்த பிறகு, 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் கீழ்பாக்கத்தில் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, ரூ. 7 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
1989ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு வெளியே வந்தவர் இலங்கைக்கு தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இப்போது டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்துள்ளார். அவரை கைது செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் புகழேந்தி.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக இன்று பதவியேற்ற இக்பால் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
டக்ளஸை உடனே கைது செய்ய வேண்டும்-சீமான்:
இந் நிலையில் தேவானந்தாவை உடனே கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தான புதிய ஒப்பந்தம் டக்ளசுக்கு பொருந்தும். புதிய ஒப்பந்தப்படி முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் டக்ளஸ் தான் என்றார்.
இந் நிலையில் சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் கூறுகையி்ல், இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான 3 வழக்குகளும் கிரிமினல் வழக்குகளே. கிரிமினல் வழக்கு என்பதால் டகளஸ் கூறுவது போல் மன்னிப்பு வழங்க முடியாது. மேலும், டக்ளஸ் தேடப்படும் குற்றவாளி என்றும் டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டோம் என்று கூறியுள்ளார்.