3ஜி ஏலம்: மொத்தம் ரூ.1.06 லட்சம் கோடி வருமானம்!
இந்த ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களின் விவரங்கள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் அறிவிக்கப்பட உள்ளன.
முன்னதாக 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தின் மூலம் மட்டுமே ரூ.67,719 கோடி வருமானம் கிடைத்தது. இப்போது வயர்லெஸ் சேவை தொழில்நுட்ப ஏலம் ரூ. 38,300 கோடியை பெற்றுத் தந்துள்ளது.
இந்த இரு ஏலங்களின் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு ரூ.35.000 கோடி வருவாய் தான் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தது. ஆனால், அதைவிட ரூ.71,000 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லி நகர 3ஜி ஏலம் முறையே ரூ.2,272 கோடி மற்றும் ரூ.2,221 கோடிக்கு மேல் ஏலம் போயுள்ளது.
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் வயர்லெஸ் சர்வீஸ் ஏலத்தில் பங்கேற்றன.
இதன்மூலம் அரசு தனது நிதிப் பற்றாக்குறையை எளிதில் சமாளிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காமலேயே கூட நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் அளவு நிதி வசதி ஏற்பட்டுள்ளது.