செம்மொழி மாநாடு: பள்ளி-கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை
சென்னை: கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
இது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் ஜூன் 23ம் தேதி, 24ம் தேதி, 25ம் தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளித்து அரசாணையிடுகிறது.
மேலும் கோவை மாவட்டத்தில் மட்டும் கோடைக்கால விடுமுறைக்கு பிறகு ஜூன் 16ம் தேதி திறக்கப்பட இருக்கிற கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஜூன் 28ம் தேதி திறக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணையிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதே போல மாநாட்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் இடமாற்றத்துக்கு விதித்த தடை நீட்டிப்பு:
இந் நிலையில் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, அனைத்து அரசு அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நிர்வாக தேவையில்லாத படசத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் என்ற ஒரே காரணத்தினால் மட்டும் செய்யப்படும் பொது மாற்றல்களுக்கு 1999ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் தடையினை 2010ம் ஆண்டிற்கும் நீட்டிக்கலாம்.
நிர்வாக தேவையின் பொருட்டு மாற்றல்கள் இன்றியமையாதது எனில், அத்தகைய மாறுதல்கள் மட்டும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையை கலந்தாலோசித்து, சுற்றோட்டத்தில் ஆணை பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உள்பட்டு அனுமதிக்கலாம்.
காலியாக உள்ள இடத்திற்கு விருப்ப மாற்றல் கோரும் விண்ணப்பம், ஒருவருக்கு ஒருவரான இசைவு மாற்றல் மற்றும் கணவன்/மனைவி பணிபுரியும் இடத்திற்கு மாற்றல் கோருபவர்களின் விண்ணப்பங்களை மட்டும், பயணப்படி மற்றும் தினப்படி முதலியன கோராதபட்சத்தில் ஆய்வு செய்து மாற்றல் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.