மனதை சுத்தி யாகம் நடத்தும் சாமியார் நித்தியானந்தா

கர்நாடக உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலையாகி வெளியே வந்தார். மீண்டும் பெங்களூர் அருகே உள்ள பிடுதி தலைமை ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்துள்ள நித்தியானந்தா, முதல் வேலையாக மனச் சுத்தி யாகத்தை நடத்தவுள்ளார்.
ஆன்மீக ரீதியாக மனதை சுத்தம் செய்யும் யாகம் மற்றும் தவத்தை நித்தியானந்தா தனது சிஷ்யர்களோடு சேர்ந்து செய்வதாக அவரது ஆசிரம வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த யாகமும், தவமும் சில நாட்களுக்குத் தொடருமாம்.
கற்பழிப்பு உள்ளிட்ட புகார்களில் சிக்கி கைதான நித்தியானந்தா கிட்டத்தட்ட 53 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமைதான் இவர் ஜாமீனில் விடுதலையானார்.
மத போதனைகளை செய்யக் கூடாது, 15 நாட்களுக்கு ஒருமுறை பிடுதி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், ராம்நகர் மாவட்ட கோர்ட் எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்.
இதையடுத்து விடுதலையான நித்தியானந்தா தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். வந்த நிலையில் தற்போது இந்த மன சுத்தி யாகத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இத்தகவலை அவரது நெருங்கிய உதவியாளரும், நித்தியானந்தாவைப் போலவே கைதாகி சிறையில் அடைபட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ளவருமான கோபால ரெட்டி என்கிற பக்த நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications