மக்கள் சாலை மறியல்: சென்னை டூ புதுச்சேரி போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், சாலை விபத்தில் மாணவி படுகாயமடைந்ததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த திடீர் போராட்டத்தால் சென்னை-புதுச்சேரி இடையிலான சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள வாயலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து திரண்டு வந்த வாயலூர் கிராம மக்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியலில் குதித்தனர்.
இந்த சாலையில் எந்த வாகனமும் நிதானமாகவோ, மெதுவாகவோ செல்வதில்லை. அதிவேகமாக செல்வதால் பல விபத்துக்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் சென்னை-புதுச்சேரி இடையிலான கடற்கரை சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போலீஸாரும் அதிகாரிகளும் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.