For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்

By Chakra
Google Oneindia Tamil News

பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க முயற்சித்த அவரது வழக்கறிஞருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது தமிழக போலீஸார் தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை முடிந்தவரை இழுத்தடித்து வருகிறது ஜெயலலிதா தரப்பு என்று முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த வழக்கை நீதிபதி மல்லிகார்ஜுனய்யா விசாரித்து வருகிறார். வழக்கையே தள்ளுபடி செய்யக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகல் கிடைக்கும்வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு ஜெயலலிதா தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, நேற்று மீண்டும் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்காததால் விசாரணையை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, இப்படி கால அவகாசம் கேட்டு கேட்டு வழக்கு விசாரணையை தள்ளிப் போட்டுவிடலாம் என்று முயற்சிக்கிறீர்களா?. உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் இல்லாமல் விசாரணையை நடத்த முடியாதா? என்று காட்டமாகக் கேட்டதோடு, நீங்கள் (ஜெயலலிதா தரப்பு) செய்வது கொஞ்சமும் சரியல்ல என்று கண்டனமும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நவநீதகிருஷ்ணன், ஜெயலலிதா மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய மனுவை என்ன காரணத்திற்காக உச்சநீதிமன்றம் நிராகரித்தது என்பதை தெரிந்துகொண்டால் விவாதத்தை அதற்கு ஏற்றவாறு நடத்தலாம். அந்த எண்ணத்தில்தான் உத்தரவு நகலுக்காக காத்திருக்கிறோம். எனவே, மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்கிறோம் என்றார்.

இதையடுத்து விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

திமுகவில் சேர்ந்த அதிமுக 'குட்டி'த் தலைவர்:

இந் நிலையில் துறையூர் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் துரைசாமி போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் துரைசாமி. இவர், அதிமுக துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வருபவர்.

இந் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொளப்பாக்கத்தில் நேர்காணல் நடத்திய போது இவருக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கினார். ஆனால் எந்த வேகத்தில் வந்ததோ அதேவேகத்தில் இந்தப் பதவி காணாமல் போய் விட்டதாம். காரணம், உட்கட்சி பூசல்.

இதன் பிறகு, இவர் அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இதனால், பெரும் அதிருப்தியில் இருந்த துரைசாமி, அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X