காதல் ஜோடி மீது மின்சாரம் பாய்ச்சி, கொடூரக் கொலை: பெற்றோர் தலைமறைவு
டெல்லி: ஜாதியின் பெயராலும் குடும்ப கெளரவம் என்ற பெயராலும் காதல் ஜோடியை அடித்து, உதைத்து, உடலில் மின்சாரம் பாய்ச்சி, இரும்புக் கம்பியால் தாக்கி, சூடு போட்டு கொடுமைப்படுத்தி, கொலை செய்துவிட்டு பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்.
டெல்லி ஸ்வரூப் நகரில் வசிக்கும் சூரஜ்-மாயா தம்பதியின் மகள் ஆஷா சைனி (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்ற கார் டிரைவரை காதலித்து வந்தார்.
இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலை ஆஷாவின் வீட்டில் கடுமையாக எதிர்த்தனர். மேலும் ஆஷாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இந் நிலையில் ஆஷாவும், யோகேசும் வீட்டைவிட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து அவர்கள ஆஷாவின் உறவினர்கள் தேடிக் கண்டுபிடித்தனர்.
நள்ளிரவு 11.30 மணியளில் காதல் ஜோடியை ஆஷாவின் பெற்றோரும் உறவினர்களும் ஒரு அறையில் பூட்டி அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர்.
விடிய, விடிய அவர்களை அடித்து மிதித்து துன்புறுத்திய அவர்கள், பின்னர் இருவருக்கும் உடலில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளனர். இதையடுத்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் இரும்புக் கம்பியை காய்ச்சி உடல்களில் சூடுபோட்டுள்ளனர். அதிகாலை 3 மணி வரை இந்தக் கொடுமை நடந்தது. உதவிகேட்டு இந்த ஜோடி அலறினாலும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
இந் நிலையில் காலை 4 மணிக்கு இருவருமே பலியாயினர். இதையடுத்து ஆஷாவின் பெற்றோரும் உறவினர்களும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார்கள்.
போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு தலைமறைவான பெற்றோரை தேடி வருகின்றனர்.
கொலையுண்ட யோகேசுக்கு பெற்றோர் இல்லை. சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். ரேணு என்ற சகோதரி மட்டும் இருக்கிறார். அவர் கூறுகையில்,
இளம் வயதிலேயே நாங்கள் பெற்றோரை இழந்துவிட்டோம், எனக்கு திருமணம் ஆனதும் யோகேஷ் தனிமையாகிவட்டான். அப்போது அவனுக்கு ஆஷா பழக்கமானாள். இருவருமே மிக அன்போடு பழகி வந்தனர்.
2 மாதத்துக்கு முன்புதான் காதல் விவகாரம் ஆஷாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. ஆஷாவின் தாய் எங்களை மிரட்டி வந்தார். ஒரு மாதத்துக்கு முன் ஆஷாவை அவளது தாய் மாமன் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
அங்கு அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தன. இதையறிந்து ஆஷாவும், யோகேசும் ஓடிப் போயுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து இப்படி கொடுமைப்படுத்தி அநியாயமாக கொன்று விட்டனர்.
ஜாதி வெறியாலும் குடும்ப கெளரவம் என்ற பெயராலும் இந்த கொடுமையை அரங்கேற்றியுள்ளனர் என்றார் கதறி அழுதபடி.