தமிழ் வழக்கு மொழி-அழகிரியிடம் வக்கீல்கள் கோரிக்கை
மதுரை : மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியிடம், மதுரை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தினர் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
உயர்நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றக்கிளை வக்கீல்கள் 6 பேர் கடந்த ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து அறுதல் கூறினர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் சங்கத்தினர் இன்று மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர்.
லோக்சபாவில் தமிழில் பேச அனுமதி தர வேண்டும் என்று ஏற்கனவே அமைச்சர் அழகிரிக்காக திமுக சார்பில் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.