மும்பையில் பலத்த மழை: புறநகர்ப் பகுதிகள் மிதக்கின்றன- கடல் சீற்றம்
மும்பை: தென் மேற்குப் பருவ மழை காரணமாக மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் புறநகர்ப் பகுதிகள் மழை நீரில் மிதக்கத் தொடங்கியுள்ளன. கடலும் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தென் மேற்குப் பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கன மழை காரணமாக புறநகர்ப் பகுதிகளான மலட், அந்தேரி, கோரேகான் உள்ளிட்ட பகுதிளில் மழை நீர் வெள்ளம் போல சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
புனேயிலும்
புனே நகரிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம்-மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலுக்குள் போக வேண்டாம் என மீனவர்களை மும்பை மாநகராட்சி எச்சரித்துள்ளது. கடற்கரைக்குப் போக வேண்டாம் என பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17ம் தேதி வரை நீடிக்கும் இந்த கடல் சீற்றத்தின்போது, 4. 70 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுப்ப வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.