இந்தியாவிலேயே இல்லாத வகையில் கல்விக்கு ரூ. 1211 கோடி ஒதுக்கீடு-ஸ்டாலின்
சென்னை: இந்தியாவிலேயே அதிகமாக தமிழகம் தான் கல்விக்காக ரூ.1,211 கோடி ஒதுக்கி உள்ளது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு ஸ்கோப் பன்னாட்டு வங்கி வழங்கிய நிதியில் சீரமைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட திறப்பு விழாவும், குன்றத்தூர் பேரூராட்சி அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரான ஸ்டாலின் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து, பேரூராட்சி அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில்,
நலிவடைந்த குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ரூ. ஒன்றறை கோடி செலவில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு ஸ்கோப் பன்னாட்டு வங்கி மறு சீரமைத்துள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பிலும், முதல்வர் கருணாநிதி சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இப் பள்ளியில் 15 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதே நிறுவனத்தார் சென்னையில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதற்காகவும் அவர்களை நான் பாராட்டுகிறேன்.
முதல்வர் கலைஞர் ஆட்சியில்தான் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில்தான் பள்ளி கல்வி, உயர் கல்விக்கு என 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பள்ளி கல்விக்கென தனி இணையதளம் வழங்கிய ஆட்சி இது.
கல்விக்கு இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் ரூ.1,211 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தரமான கல்வி கற்க தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மாணவர்கள் சென்ற காலம் மாறிவிட்டது. இப்போது மற்ற மாநிலத்தாரும், வெளிநாட்டவரும் கல்வி கற்க தமிழகத்திற்கு வருகின்றனர். தமிழகம் கல்வித் துறையில் சிகரமாக விளங்குகிறது. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு ஸ்கோப் பன்னாட்டு வங்கியைபோல் மற்ற தனியார் நிறுவனங்களும் சமூக தொண்டாற்ற முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.