கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்
திருச்செந்தூர்: திருச்செந்தூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கத்தார் நாட்டில் மர்மமான முறையில் இறந்து உள்ளதாக அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த பிரிங் பர்னாந்து மகன் ராஜேஷ் (27). இவர், மும்பை தனியார் நிறுவனம் மூலம், 2007 ம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், கல்குவாரி கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.
அதன் பின்பு, வேலை ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீடித்தார். இந்த நிலையில், ஊருக்குச் செல்ல விடுமுறை வேண்டுமென ராஜேஷ் கேட்டுள்ளார். அதற்கு கம்பெனியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஷ் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அந்த கம்பெனியினர் கடந்த 12 ம் தேதி ஊரிலுள்ள அவரது பெற்றோருக்கு, போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் வேலை பார்க்கும் ராஜேஷின் அண்ணன் சுதாகர், ராஜேஷ் உடலை பார்த்துள்ளார். அதன் பின்னர், ராஜேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து தங்களது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் ராஜேஷின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications