செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் திருக்குறளுக்கு நடன வடிவில் விளக்கம் தரும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி தரப்படாததால் விரக்தி அடைந்த நாடகக் கலைஞர் திருவள்ளுவர் வேடம் பூண்டு உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் 27 வயதான, பி.ஏ. படித்துள்ள முரளிதரன். இவர் திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளுக்கும் நடன வடிவில் விளக்கம் தரும் வித்தியாசமான நிகழ்ச்சியை பல்வேறு ஊர்களில் நடத்தி வருகிறார். இதுதவிர வேறு பல சாதனை நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார்.
இந்த நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தனது வித்தியாசமான நிகழ்ச்சியை அளிக்க அவர் முயற்சித்தார். ஆனால் அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து திருவள்ளுவர் வேடம் பூண்டு, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்.
இதை அறிந்த திருவல்லிக்கேணி போலீஸார் முரளிதரனைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்து விட்டனர்.