கோவையில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கோவை: கேரளாவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் கோவையில் பரவாமல் தடுக்க முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறினார்.
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறுகையில்,
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பனறிக்காய்ச்சல் பரவி வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக கோவையில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை 3096 பேருக்கு பன்றிக் காய்ச்சலின் அறிகுறி உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்துப் பாதைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்படும். இம்முகாமில் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ ஆய்வாளர் அமர்த்தப்படும். இந்த குழு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருவோரை பரிசோதனை செய்யும்.
யாருக்கேனும் பனறிக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். தமிழக-கேரள எல்லையில் உள்ள மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டு அமைக்கப்படும்.
மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அறிஞர்கள் மருத்தவ சோதனைக்கு உட்படுத்த மாட்டார்கள். கோவை விமான நிலையத்தில் மருத்துவ மையம் அமைக்கப்படும். விமானத்தில் வருபவர்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் இம்மையத்தில் சிகிச்சை பெறலாம்.
மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மருத்துவ பணிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 100 சுகாதாரத்துறை அதிகாரிகள் வர உள்ளனர்.
மாநாட்டிற்கு வருபவர்களுக்காக 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயாராக உள்ளது. மாநாட்டின் போது சுகாதாரமற்ற தண்ணீர் பாக்கெட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று கூறினார்.