சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களும் போராட்டத்தில் குதித்தனர்-நாளை ஸ்டிரைக்
சென்னை: தமிழை கோர்ட் மொழியாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் பரபரப்படைந்துள்ளது.
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக அறிவிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை தமிழகம் முழுவதும் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் அனைத்து வக்கீல்களும் குதிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். வக்கீல்கள் அங்கயற்கன்னி, பார்த்தசாரதி, காசிநாதபாரதி, ராஜு, சேசுபாலன் ராஜா ஆகியோர் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பால் கனகராஜ் பேசுகையில்,
தமிழை வழக்கு மொழியாக்க கோரும் இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். கொள்கை அளவிலாவது தமிழை வழக்கு மொழியாக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு உடனடியாக அதை அறிவிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி நாளை ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
நாளை திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபடவுள்ளனர்.