108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்-அமைச்சர் பன்னீர் செல்வம்
கடலூர்: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள் வழங்கப்படவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் பேசுகையில்,
தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1,17,057 பேருக்கு ரூ.326 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 700 பேருக்கு ரூ.2.5 கோடி செலவு செய்யப்படுகிறது.
ஏழை மக்களின் உயிர் காக்கும் சேவையைச் செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், தற்போது 385 வாகனங்கள் உள்ளன. தொலைபேசி அழைப்பு வந்த 15 நிமிடத்தில் இவை நோயாளிகளை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்கின்றன.
தற்போது இந்த கால் மணி நேரம் என்பதை ஐந்து நிமிடமாக குறைக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் சேவைக்காக கூடுதலாக 200 வேன்கள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையின் கால அளவு மேலும் குறைந்து கூடுதல் மக்களுக்குப் பலன் கிடைக்கும் என்றார்.