உத்தப்புரத்தில் மீண்டும் ஜாதிக் கலவரம்-தடியடி-போலீஸார் காயம்
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் மீண்டும் ஜாதி ரீதியிலான மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். இதில் சிலர் போலீஸார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் போலீஸார் சிலர் காயமடைந்தனர்.
உத்தப்புரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கும், இன்னொரு சமூகத்திற்கும் இடையே பல காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து ஒரு சமூகத்தினர் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது பகுதிகளுக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் நீண்ட நெடிய சுவர் ஒன்றை கட்டினர்.
பல காலமாக இந்த தீண்டாமைச் சுவர்இருந்து வந்தது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பிரச்சினையாக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் விளைவாக இந்த தீண்டாமைச் சுவரை போலீஸார் இடித்துத் தள்ளினர். இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையிலான மோதல் நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவி புஷ்பமும், அவரது கணவர் மாரியப்பனும், மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள சாக்கடையை ஆள் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சாக்கடையை சுத்தம் செய்வது குறித்து பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்தனர். மோதல் பெரிதாவதைப் பார்த்த அவர்கள் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். அப்போது சிலர் போலீஸார் மீது கல்வீசித் தாக்கியதில், எஸ்.ஐ சுப்புராஜ் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
பிரச்சினை வெடித்து விடாமல் தடுக்க கூடுதல் போலீஸாரும், துப்பாக்கி ஏந்திய ஆயுதப் படையினரும் குவிக்கப்ப்பட்டுள்ளனர்.