சுங்கச்சாவடி ஊழியரை துப்பாக்கியால் சுட்டதாக திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
திருச்சி: மருங்காபுரி திமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவாகியுள்ளது.
விராலிமலை மெயின்ரோட்டில் சுங்கவரி மையம் ஒன்று உள்ளது. சுங்கவரித் துறையினர், நேற்று இரவு 11 மணி அளவில் அங்கு வந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை நிறுத்தி 40 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். அந்த காரில் மருங்காபுரி திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் இருந்திருக்கிறார்.
அருகில் உள்ள மருங்காபுரிக்கு செல்ல 40 ரூபாயா என்று அவர் கேட்டபோது சுங்கவரி பொறுப்பாளர் பழனிச்சாமிக்கும், செல்வராஜுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரை அவ்விடத்தை செல்ல பழனிச்சாமி அனுமதிக்கவில்லை. இதையடுத்து, மருங்காபுரியில் இருந்து வேறு ஒரு காரை வரவழைத்து செல்வராஜ் சென்றுள்ளார்.
இந்நிலையில் பழனிச்சாமி இன்று விராலிமலை காவல்நிலைய ஆய்வாளர் மயில்சாமியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், சுங்கவரி கட்டணம் கேட்டதற்காக தன்னை திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் துப்பாக்கியால் சுட்டனர் என்று கூறியுள்ளார். மேலும், அந்த துப்பாக்கி தோட்டாக்களையும் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார், செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு எதிராக சுங்கவரி பொறுப்பாளர் பழனிச்சாமி மீது திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜூம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சுங்கவரி மையத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவர்கள் வந்த ஸ்கார்பியோ காரின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications