சென்னை விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: சென்னையில் நடந்த சாலை விபத்தில், உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக தரப்பட்டன.
திண்டுக்கல்லைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் கடந்த வாரம் சென்னையில் நடந்த சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர், உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று உடலை கொண்டு வந்தனர்.
அங்கு அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தானமாக பெறப்பட்டது. இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் சுரேந்திரன் கூறுகையில்,
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டது என்று தெரிவித்தார்.