ரயில்வே பணியாளர் தேர்வில் மாபெரும் ஊழல்: வாரியத் தலைவர் சஸ்பெண்ட்-மகன் பேர் கைது
மும்பை: பணம் வாங்கிக் கொண்டு பணியாளர் தேர்வு வினாத் தாள்களை கசியவிட்ட மும்பையைச் சேர்ந்த ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவரின் மகன் உள்பட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மும்பை ரயில்வே தேர்வாணைய தலைவர் எஸ்.எம். சர்மா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அசிஸ்டன்ட் லோகோ பைலட், அசிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர்களை தேர்வு செய்வதற்காக நடந்த தேர்வில், தேர்வு எழுதியவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்துக் கொண்டு கேள்வித் தாளை விற்றுள்ளது இந்தக் கும்பல்.
இது குறித்து தகவல் வெளியானதையடுத்து சிபிஐ மும்பை, பெங்களூர், ராய்ப்பூர், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ரயில்வே அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது.
மும்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.எம். சர்மாவின் மகன் விவேக் பரத்வாஜ், முன்னாள் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் (ராய்ப்பூர்) ஏ.கே.ஜெகந்நாதன், அவரது மகன் ஸ்ரூஜன், ராய்ப்பூரைச் சேர்ந்த ஒரு ஏஜென்ட், ஆந்திர மாநில சுகாதாரத்துறை அதிகாரி, 3 ஹைதராபாத் ஏஜென்டுகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.
ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரிகளின் உடந்தையுடன் இவர்கள் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் நகலை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்துள்ளனர்.
தேர்வில் வென்றவுடன் பணிக்கு தேர்வு பெற ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 3.5 லட்சம் வாங்கியுள்ளனர்.
தேர்வு எழுதுவோர் தங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பது என்பதற்காக அவர்களது கல்விச் சான்றிதழ்களை இந்த கும்பல் வாங்கிக் வைத்துக் கொள்ளுமாம்.
மும்பை ரயில்வே தேர்வாணைய தலைவர் சர்மாவின் குடும்பத்தினர் வீடுகளில் சிபிஐ நடத்திய சோதனையில், ரூ. 60 லட்சம் பிடிபட்டது.
ஹைதராபாதில் முன்னாள் கோட்ட ரயில்வே மேலாளர் ஜெகந்நாதன் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 21.5 லட்சம் சிக்கியது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பத்திருந்த 444 பேரின் சான்றிதழ்களும் சிக்கின. பெங்களூரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெகந்நாதனிடம் நடத்திய சோதனையில் ரூ. 12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மம்தாவால் நியமிக்கப்பட்டவர்:
ரயில்வே தேர்வாணையத்தில் ஊழல் நடப்பதாகக் கூறி, முந்தைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நியமித்த 20 தேர்வாணைய அதிகாரிகளை நீக்கிவிட்டு புதிய அதிகாரிகளை நியமித்தார் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் இந்த பிராடு சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த ஊழல் தொடர்பாக சர்மா இன்னமும் கைது செய்யப்படவில்லை. அவர் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் இருப்பதாக கூறியுள்ள சி.பி.ஐ. சர்மாவை கைது செய்வதற்காக அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
எனவே சர்மா விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே வினாத்தாள்கள் கசிந்து விட்டது தெரிய வந்துள்ளதால் கடந்த 6 மற்றும் 13ம் தேதி நடந்த யில்வே தேர்வு முடிவுகளை அறிவிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ரயில்வே உள்ளது.
மேலும் வரும் 27ம் தேதி ரயில்வே தேர்வை நடத்துவதா, ஒத்தி வைப்பதா என்ற குழப்பமும் நிலவுகிறது.
ரயில்வே தேர்வை முழுமையாக ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்துமாறு சி.பி.ஐ. பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் போலி ரயில்வே டிக்கெட்-6 ஊழியர்கள் சஸ்பெண்ட்:
இதற்கிடையே பிகாரில் முங்கர் ரயில் நிலையத்தில் போலி டிக்கெட்டுகளை அச்சடித்து விற்று வந்த 6 ஊழியர்கள் பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள போலி டிக்கெட்டுகள், 76 அச்சு எந்திரங்கள் மெஷின்கள், ரூ.57 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.