தவறான சிகிச்சையால் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் சாவு! - மனைவி புகார்
சென்னை:- தவறான சிகிச்சையால் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் மரணமடைந்ததாக மனைவி புகார் கொடுத்துள்ளார்.
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (35). இவர் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (30). ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ராமாவரத்தில் தங்கியுள்ளனர்.
அரவிந்த் குடல் வால்வு நோயினால் அவதிப்பட்டார். எனவே அறுவைச் சிகிச்சைக்காக அவரை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 13-ந் தேதி சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாத்திரை வாங்கி வரும்படி அவரது மனைவி விஜயலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் மாத்திரை வாங்கி வரசென்றார். திரும்பி வந்தபோது அவரது கணவர் அரவிந்த் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். கதறியபடி அவர் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஏராளமானோர் மருத்துவமனையில் கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, அபிராமபுரம் போலீசில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது விஜயலட்சுமி புகார் செய்தார்.
"எனது கணவரை குடல்வால்வு சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதித்தோம். டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் அவர் இறந்து விட்டார்.
எனவே, எனது கணவரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...", என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications