இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!
சென்னை: இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் சைக்கிள்களின் நிறம் ஆரஞ்சு வண்ணத்துக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய கறுப்பு, பச்சை நிறம் வழக்கத்திலிருந்து முழுமையாக அகற்றப்படுகிறது.
ஏழைகளின் வாகனமான சைக்கிள்தான் இன்றளவும் கிராமங்களில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில்கூட சைக்கிள்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளது.
பெட்ரோல்-டீசல் விலையைச் சமாளிக்க சைக்கிள் போக்குவரத்து பெருமளவு உதவுகிறது.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நடைபயிற்சி அல்லது சைக்கிள் பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அந்தளவுக்கு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருப்பது சைக்கிள்.
இன்றைக்கு நகர்ப் புறங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் டூ வீலர்கள், கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும் இந்த வாகனங்கள் ஒளிவெள்ளத்தை பாய்ச்சியபடி பறந்து செல்கின்றன. அந்த நேரத்தில், சிலர் மட்டும் சைக்கிளில் செல்கின்றனர். அப்போது, சைக்கிளின் பின்பக்கம் உள்ள சிறிய டேஞ்சர் லைட் சைக்கிள் செல்வதை பளிச்சென்று காட்டுவதில்லை. இதனால், சைக்கிள்கள் விபத்தில் சிக்குவது சாதாரணமாகிவிட்டது. சிலசமயம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
பொதுவாக, சைக்கிள்கள் கறுப்பு, கரும்பச்சை, புளூ, சில்வர் ஒயிட் போன்ற நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன. கறுப்பு நிற சைக்கிள்களைத்தான் எல்லோரும் விரும்பி வாங்குகிறார்கள். சைக்கிள்கள் கறுப்பு, பச்சை நிறத்தில் இருப்பதால் இரவு வெளிச்சத்தில் அவை ஒளிர்வதில்லை. விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
இந்த நிலையில், இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் சைக்கிள்களின் நிறத்தை மாற்றி பளிச்சிடும் ஆரஞ்சு நிறத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சைக்கிள்களின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக மத்திய தொழில் அமைச்சகத்திடம் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதலும் வாங்கிவிட்டது.
சைக்கிள்கள் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் இரவில் பளிச்சென்று தெரியும். இதனால், விபத்துகள் பெருமளவு தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட யோசனையை மத்திய தொழில் அமைச்சகம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. இதேபோல், மோட்டார் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பின்புறம் உள்ள மட்கார்டின் நிறத்தையும் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விதிமுறைகள் உருவாக்குவது மற்றும் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சைக்கிள் தயாரிப்பாளர்களோடு தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தொழில்கள் அமைச்சக அதிகாரிகளும், சர்வதேச சாலை போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகளும் ஜுலை 5-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சைக்கிள்களின் நிறம் மாற்றம் தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய தொழில் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications