இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி
மதுரை: ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், ஏராளமான பயன்களை தலைவர் கலைஞர் செய்து வருகிறார். கலைஞரின் ஆட்சி, தி.மு.கழகத்தின் ஆட்சி, தொடர்ந்து அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரை டி.வி.எஸ். நகர் பகுதியில், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அந்த பகுதியில் பூங்கா அமைப்பதற்காக ரூ.45 லட்சம் நிதியை மு.க.அழகிரி நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத் தொடர்ந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பூங்காவை அமைச்சர் அழகிரி நேற்று திறந்து வைத்தார். பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், இன்றைய தினம் தலைவர் கலைஞரின் சாதனையால் ஏராளமானோர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இங்கு 270 ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி மற்றும் வங்கிகள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட உள்ளன.
ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், ஏராளமான பயன்களை தலைவர் கலைஞர் செய்து வருகிறார். கலைஞரின் ஆட்சி, தி.மு.கழகத்தின் ஆட்சி, தொடர்ந்து அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அழகிரி.