கேரளா-பன்றி காய்ச்சலை தொடர்ந்து மஞ்சள் காமாலையும் பரவுகிறது
கொல்லம்: கேராளவில் பரவி வரும் பன்றிகாய்ச்சல் நோயால் ஆறு பேர் பலியாகியுள்ள நிலையில் தற்போது மஞ்சள் காமாலை நோயும் வேகமாக பரவி வருகிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மட்டும் 12 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்மேற்கு பருவ மழை துவங்கிய நிலையில் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல், டெங்கு, மஞ்சள் காமாலை நோய்கள் படு வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக பன்றி காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்நோய்க்கு நேற்று முன்தினம் வரை இரு பெண்கள், ஒரு வாலிபர், உள்பட ஆறு பேர் பலியானார்கள். இதில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மெழுவேலி பகுதியை சேர்ந்த அவினாஷ், என்பவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவல்லா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதேபோல, திருவனந்தபுரம் பிரப்பன்கோடு பகுதியை சேர்ந்த ரவீந்திரன் மனைவி இந்திரா குமாரி, விழிஞ்சம் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி மோகனன், கொல்லம் பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் பிஜீ, லீனா கோபி ஆகியோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்றிக் காய்ச்சல் காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர 22 பேருக்கு டெங்கு காய்ச்சலும், மூவருக்கு எலி காய்ச்சலும் இருப்பது தெரிய வந்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 5 பேரும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 7 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் தலா இருவர், கோட்டயத்தில் முவர், பலக்காடு, ஆலாப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா ஓருவர் என மொத்தம் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகியவை பரவி வருவதால் கேரள மக்கள் பெரும் பீதியில் மூழ்கியுள்ளனர்.