விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை

1984ம் ஆண்டு நடந்த methyl isocyanate வாயு கசிவால் உடனடியாக 5,295 பேர் உயிரிழந்தனர். மேலும் 10,047 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட சுமார் 5,60,000 பேரில் ஆயிரக்கணக்கானோர் பார்வை இழந்தனர். மேலும் ஏராளமானோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு ஊனமாயினர். மொத்தத்தில் 37,000 பேர் ஊனமடைந்தனர்.
இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பி்ல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை தரப்படவில்லை. இதையடுத்து போராட்டங்கள் வெடித்தன.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆராய ப. சிதம்பரம் தலைமையில் அழகிரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தக் குழு இதுவரை 4 முறை கூடி விவாதித்துவிட்டது. இதையடுத்து இன்று தனது இடைக்கால அறிக்கையை பிரதமரிடம் அளிக்கவுள்ளது.
அந்த அறிக்கையில், போபால் ஆலை அதிபர் ஆன்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
விஷவாயுவில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், முழு அளவில் உடல் ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், பாதி அளவு பாதிக்கப்பட்டநர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்க வேண்டும்.
ஆலையில் இன்னும் படிந்துள்ள விஷ ரசாயனத்தால் சுற்றுப் பகுதியில் வாழ்பவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகி்றனர். இதை சுத்தம் செய்யும் பணியை மத்தியப் பிரதேச அரசு செய்ய வேண்டும். இதற்கான ரூ. 300 கோடி நிதியையும், தொழில்நுட்ப உதவியையும் நிபுணர்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மிகவும் தீவிரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட போபால் நினைவு அறக்கட்டளை மருத்துவமனையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இந்த மருத்துவமனைக்கு ரூ. 230 கோடி செலவிட்டு நவீனப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிதம்பரம் குழுவில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குழு தேவைப்படும்போது மீண்டும் கூடி விவாதித்து, பரிந்துரைகளை அமலாக்குவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவ்வப்போது கண்காணிக்கும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications