100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக்க வேண்டும்:விவசாய தொழிலாளர் சங்கம்
திண்டுக்கல்: விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாகவும், கூலியை ரூ.100ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தித் தரவும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 7 வது அகில இந்திய மாநாடு திருச்சியில் வரும் ஜூலை 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் பிரச்சாரம், கருத்தரங்குகள், கிராமக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், தமிழகத்தில் நடைபெறும் பிரச்சாரம் மற்றும் கருத்தரங்குகளில் ஹன்னன் முல்லா பங்கேற்று வருகின்றார்.
இந்த நிலையில், அகில இந்தியத் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலை தேடி விவசாயத் தொழிலாளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் அவல நிலை உள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு என சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் இல்லை. இதற்கு திமுக அரசும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய அரசு பொது விநியோக முறையை சீர் செய்யவில்லை. இதனால் இவர்கள் உணவுக்காக அன்றாடம் போராடி வருவது தான் நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனை எதிர்த்துப் போராட விவசாயத் தொழிலாளர்களை ஒன்றினைத்து வருகின்றோம்.
விவசாயத் தொழிலாளர்களில் 100 நாள் வேலை அட்டை பெற்றவர்களுக்கு முறையாக வேலை கொடுக்கப்படவில்லை. வேலை கொடுக்கப்படாதவர்களுக்கு வேலை இல்லாக் கால நிவாரணத்தை மாநில அரசுகள் வழங்கவும் முன் வரவில்லை.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாகவும், ரூ.100 கூலியை ரூ.150 ஆகவும் உயர்த்தித் தர வேண்டும்.
மேலும் பல இடங்களில் இந்த திட்டத்தின் கீழ் வேலை தராமல் இயந்திரங்களை பயன்படுத்துவதும், காண்ட்ராக்ட் விடும் நிலைமையும் நிலவி வருகின்றது.
தமிழகத்தில் திமுக அரசு 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை நிலமற்ற 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு அளிப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. மாநிலம் முழுவதும் இதுவரை 2 லட்சம் ஏக்கர் நிலம், ஒன்றே முக்கால் லட்சம் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதி நிலங்கள் யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது என்றார்.