குற்றாலம் அருவியில் 'விஐபிக்கள்' தொல்லை!
தென்காசி: குற்றாலத்தில் விஐபி என்ற பெயரில் ஒரு சிலரை மட்டும் தனியாக குளிக்க அனுமதிப்பது, வரிசையில் நிற்கும் சுற்றுலா பயணிகளை அதிருப்தி அடைய செய்து வருகிறது.
குற்றாலத்தில் மெயின் அருவியில் தண்ணீர் சுமாராக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
மதியம் சுமார் 2 மணி அளவில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தபால் நிலையம் வரை சுற்றுலா பயணிகள் அணிவகுத்து நிற்கையில், ஏதோ விஐபி என்று கூறிய சிலர் தனியாக குளிக்க வேண்டும் என்று போலீசாரிடம் நிர்ப்பந்தித்தனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் யாரேனும் விஐபியாக இருந்தால் நமக்கு ஏதற்கு வம்பு என்று நினைத்து அத்தனை கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களை மட்டும் தனியாக சிறிது நேரம் குளிக்க அனுமதித்தனர்.
அதிலும் ஆண்கள் குளிக்கும் பகுதியிலேயே விஐபி பெண்களும் குளித்தனர். இதனால் வரிசையில் காத்திருந்தோர் எரிச்சல் அடைந்தனர்.
களக்காட்டில் போதை பார்ட்டிகளின் தொல்லை!:
களக்காடு தலையணை பகுதியில் மது அருந்தும் கும்பல் மது பாட்டில்களை தண்ணீருக்குள் உடைத்து போடுவதால் சுற்றுலா பயணிகள் காயமடைந்து வருகின்றனர்.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை பகுதி உள்ளது. இங்கு ஓடும் பச்சையாற்றில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த சாரல் மழையால் தலையணையில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மது அருந்தும் கும்பலால் தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலையணை பச்சையாற்றில் மது அருந்தும் கும்பல் மதுகுடித்து விட்டு பாட்டில்களை ஆற்றுக்குள் வீசியெறிந்து உடைத்து விடுகின்றனர்.
இதனால் ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை கண்ணாடி துண்டுகள் பதம் பார்க்கின்றன. ஆர்வமுடன் குளிக்க செல்லும் பயணிகளை பாட்டில் துண்டுகள் கீறி விடுவதால் ரத்த காயங்களுடன் வெளியில் வருகின்றனர். கடந்த வாரம் மட்டும் பல வெளியூர் சுற்றுலா பயணிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications