ராஜ்யசபா எம்.பி. பதவி: என்.டி.ஆர் சிலையில் தூக்கில் தொங்கிய தெ.தேசம் முன்னாள் மேயர்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பங்கி அனந்தய்யா, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார்.
மேயராகவும் இருந்துள்ள இவர் சமீபத்தில் தனது கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டார். ஆனால் அவருக்கு சீட் தர நாயுடு மறுத்து விட்டார்.
இதை தட்டிக் கேட்ட அனந்தய்யாவை கட்சியை விட்டும் நீக்கினார். இதனால் வேதனையடைந்த அனந்தய்யா கர்னூல் நகர பஜாரில் உள்ள கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவின் சிலையில் தூக்கில் தொங்கினார்.
தூக்கில் துடிதுடித்த அவரை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனந்தய்யா தூக்கில் தொங்கியபோது பற்களுக்கு இடையே சிக்கி நாக்கு சிறிதளவு துண்டாகியுள்ளது. முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது இதயத் துடிப்பும் சீ்ர்குலைந்துள்ளது. இதனால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
தெலுங்கானாவில் 10 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்:
இந் நிலையில் ஆந்திராவில் இருந்து பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் சில மாதங்களுக்கு முன் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்தத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகியவை தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. நாயுடு தனது 7 வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications