போலீசை கண்டித்து செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
நெல்லை: கிராம சுகாதார செவிலியர்கள் 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் நிர்மலா தலைமையில் செவிலியர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
கலைஞர் காப்பீட்டு திட்டம், கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் ஆகிய நலத்திட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்நிலையில் வாசுதேவநல்லூர் போலீசார் கிராம சுகாதார செவிலியர்கள் கிரிஜா, கோமதி, மணிமொழி, மரிய அந்தோணி அம்மாள் ஆகிய 4 பேரையும் கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் கிரிஜாவிடம் இருந்த ஸ்டெதஸ்கோப்பையும், ரத்த அழுத்த கருவியையும் எடுத்துச் சென்றுள்ளது அத்துமீறிய செயலாகும். எனவே, செவிலியர்கள் மீது தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.