ஆசிய கோப்பை: இறுதி லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை
தம்புல்லா: இலங்கையுடன் நடந்த ஆசியா கோப்பை போட்டியின் இறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா படு தோல்வி அடைந்தது.
10-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லா நகரில் நடந்து கொண்டிருக்கிறது. 4 நாடுகளுக்கு இடையிலான இந்த போட்டியில் பாகிஸ்தான் (ஒரு வெற்றி, 2 தோல்வி) மற்றும் வங்காளதேச (3 தோல்வி) அணிகள் வெளியேறி விட்டன.
இதை அடுத்து இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இறுதிப்போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் நேற்று இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் நடந்தது. இதில் காயம் காரணமாக ஷேவாக் பஙகேற்கவில்லை.
டாஸ்' ஜெயித்த இலங்கை அணி இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கவுதம் கம்பீரும், தினேஷ் கார்த்திக்கும் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் தந்தனர். கம்பீர் 23 ரன்கள் எடுத்த நிலையில், ரன்டிவால் கேட்ச்' செய்யப்பட்டார்.
தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடி 40 ரன்களைச் சேர்த்தார். விராட் கோலி (10 ரன்), சுரேஷ் ரெய்னா (18 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களுடன் வெளியேறிய நிலையில், ரோகித் ஷர்மாவும், கேப்டன் டோனியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
39-வது ஓவரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பர்வீஸ் மகரூப், ஹாட்ரிக்' விக்கெட் எடுத்து இந்திய அணியை நிலை குலைய வைத்தார்.
இது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்துள்ள 26-வது ஹாட்ரிக் சாதனையாகும். வாஸ் (2 முறை), மலிங்காவுக்கு அடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இலங்கை பவுலர் என்ற சிறப்பையும் 25 வயதான மகரூப் பெற்றார்.
இப்படியாக தட்டுத் தடுமாறி ஆடிய இந்தியா 42.3 ஓவர்களியே அனைவரையும் இழந்து, 209 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 10 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை மகரூப் எடுத்தார். இவ்வாறு இவர் 5 விக்கெட் கைப்பற்றுவது இது 2-வது முறையாகும்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் சங்கக்கரா 73 ரன்களைக் குவித்தார். மஹேலா ஜெயவர்த்தனே 53 ரன்களைச் சேர்த்தார். இந்திய தரப்பில் ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளும், பிரவீன்குமார் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தப் போட்டித் தொடரின் மூன்று ஆட்டங்களிலும் இலங்கை வென்றுள்ளது. இந்தியா 2 போட்டிகளில் வெற்றி கண்டது. நாளை இரு அணிகளும் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.