ரூ.54 கோடி மோசடி: சிட்டி லிமோசின் இயக்குனர்கள் கைது
சென்னை: சிட்டி லிமோசின் நிதி நிறுவனம் ரூ 54 கோடி நிதி மோசடி செய்ததாக அதன் இயக்குநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது, சிட்டி லிமோசின் என்ற நிதி நிறுவனம். மேலும் 13 வெவ்வேறு பெயர்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கொடுத்த மோசடி புகாரை அடுத்து, அதன் இயக்குனர்கள் அப்துப் மஜீத் மற்றும் அவரது உறவினர் கீதா ரசாக்கி ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைத்தது.
தமிழகத்திலும் இந்த நிறுவனத்தின் மீது பல மோசடி புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மும்பையில் இருந்து இவர்கள் 2 பேரையும் சிறை கைதி மாற்று வாரண்டு (பி.டி. வாரண்டு) மூலம் சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவர்களை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னையில் உள்ள நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக, ஜெயிலில் இருந்து அப்துல் மஜீத், கீதா ரசாக்கி ஆகியோரை சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்த மனுவை நீதிபதி யூசுப் அலி விசாரித்தார். தொடர்ந்து அவர்கள் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications