கார் விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.40 லட்ச நஷ்ட ஈடு
தூத்துக்குடி: கார் விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ராமநாடார்விளையை சேர்ந்தவர் சேதுராஜன். இவர் நெல்லையில் சப்-கலெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12-ம் தேதி சேதுராஜன், அவரது மனைவி ஜெயராணி, மகன் பெனட் ஜார்ஜ் நெப்போலியன், பேரன் பெனசட் ஜானிகிரேசன் (ஒன்றரை வயது) ஆகியோர் மதுரைக்கு காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி இவர்கள் கார் மீது மோதியது.
இதில் பெனட் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். சேதுராஜன் மற்றும் அவரது மனைவி ஜெயராணி ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விபத்தில் பலியான பெனட் ஜார்ஜ் நெப்போலியன் நகை அடகுக் கடை வைத்திருந்தார். இவரது மனைவி சர்மிளா மற்றும் காயமடைந்தவர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆண்ட்ரூ மணி தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் ஒன்றுல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேரிஅன்சலம், பஜாஜ் அலயன்ஸ் நிறுவனம் விபத்தில் பலியான பெனட் ஜார்ஜ் நெப்போலியன் குடும்பத்திற்கு 40 லட்சத்து 250 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் காயமடைந்த சேதுராஜனுக்கு 9 லட்சத்து 19 ஆயிரத்து 310 ரூபாயும், ஜெயராணிக்கு 90 ஆயிரம் ரூபாயும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications