17 சதவீதத்தை நெருங்கும் உணவுப் பணவீக்கம் !
டெல்லி: இந்தியாவின் உணவுப் பணவீக்கம் கிட்டத்தட்ட 17 சதவீதத்தை நெருங்குகிறது.
கடந்த வாரம் 16.12 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்க அளவு, நடப்பு வாரத்தில் 16.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது சற்று அதிகபட்ச உயர்வுதான் என்பதால், பணவியல் கொள்கையை இன்னும் நெருக்க வேண்டிய அவசியத்துக்குள்ளாகியுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
எரிபொருள்களுக்கான குறியீட்டெண்ணில் இந்த வாரம் மாறுதல் ஏதுமில்லை. அதே 13.18 சதவீதமாகவே உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்ட பின் 10 ஆண்டு கடன் பத்திரங்களின் வருவாய் அளவு 7.60லிருந்து 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் 50 புள்ளிகள் அடிப்படையில் இருமுறை வட்டி விகிதங்களை உயர்த்தியது. இந்த நிலையில் மேலும் பணவீக்கம் உயர்ந்து வருவதால் வரும் ஜூலை 27-ம் தேதி மேலும் வட்டிவீத உயர்வை அறிவிக்கும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆண்டு பணவீக்க வீதத்தைப் பொருத்தவரை கடந்த மே மாத நிலவரம் 10 சதவீதமாக இருந்தது.
பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்வு குறித்து விவாதிக்க நாளை நடக்கும் கூட்டத்துக்குப் பிறகு பணவீக்கத்தின் அளவில் மேலும் மாறுதல்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜூன் இறுதி மற்றும் ஜூலையில் பருவமழை சரியாக இருந்தால், உணவுப் பணவீக்கம் மற்றும் பொதுப் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதாகவும், மழை பொய்த்தால் நிலைமை விபரீதமாகும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications