Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்ப்பது பெரும் சவாலாகும்-சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ் பயிலும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்ப்பதும், அன்றாட வாழ்க்கையில் தமிழைக் கருத்துப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிப்பதும் நாம் எதிர்நோக்கியுள்ள முக்கியச் சவாலாகும் என்று சிங்கப்பூர் தொழில், வர்த்தகம் மற்றும் கல்வித் துறை துணை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறினார்.

கோவையில் நடைபெறும் 9-வது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

தமிழின் வளமான பாரம்பரியத்தைச் சிறப்பிக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், எதிர்காலத் தலைமுறையினரும் தமிழின் அவசியத்தைக் கட்டிக் காக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய உலகமயமாதல் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஏற்பவும் தமிழை ஈடுகொடுக்கச் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் இணையமும், தகவல் தொழில்நுட்பமும் முக்கியப் பங்கு வகிக்கும்.

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் இளைஞர்களிடையே தமிழை வாழும் மொழியாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் ஒன்று. பள்ளிகளில் முக்கியப் பாடங்களில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது. சிங்கப்பூரின் தமிழ் பேசும் சமூகம் சிறியதாக இருந்தாலும் பெரும்பாலானோர் பேச்சுத் தமிழைச் சமூக மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர். தமிழின் வளர்ச்சிக்கு வலுவான சமூக ஆதரவும் அவசியமாகிறது.

பல்வேறு மொழி மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளின் வழியே மாணவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளவும் வகுப்பறைக்கு வெளியே அவர்கள் தமிழைப் பயன்படுத்தவும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் பிற சமூக அமைப்புகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

சிங்கப்பூரில் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலம் பேசும் குடும்பப் பின்னணியில் இருந்து வருகின்றனர். மாணவர்களை ஈர்க்கும் இணையத்திலும் ஆங்கிலப் பயன்பாடே அதிகம். இச்சூழலில், தமிழ் பயிலும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்ப்பதும், அன்றாட வாழ்க்கையில் தமிழைக் கருத்துப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிப்பதும் நாம் எதிர்நோக்கியுள்ள முக்கியச் சவாலாகும்.

சிங்கப்பூர் ஒரு தகவல் தொடர்புத் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது. ஆகவே, தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தமிழை இடம்பெறச் செய்ய முடிகிறது.

எதிர்காலக் கல்வியில், தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். சிங்கப்பூரில் 81 சதவீத குடும்பங்களில் இணைய வசதி உண்டு. இதை பயனுள்ள வழிகளில் செயல்படுத்தினால் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் மாணவர்கள் சிறப்பாகக் கற்கவும், கருத்துப் பரிமாறவும் முடியும்.

இணையம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தற்போது ஆசிரியர்களும் திறம்பெற்று விளங்குகின்றனர். இணையத்தில் உள்ள வங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் இயல்பான முறையில் சிறப்பாகக் கற்பிக்க முடியும். மாணவர்களின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழித் திறன்கள் மேம்படும்.

நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி குறைந்து தொடர்புகள் அதிகரிப்பதால் எதிர்காலத் தொழில்நுட்பம் இன்னும் பல மாற்றங்களைத் தொடர்ச்சியாகச் சந்திக்கும்.

எதிர்காலத்தில் தமிழ் பேசும் இளைஞர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவர். அவர்கள் புதிதாகவும், விரைவாகவும் தகவல்களைப் பெறுவர். ஆகவே, தொடர்ச்சியாக புத்தாக்கமும், பயன்முனைப்பும் மிகுந்த வழிகளில் தமிழைக் கற்பித்துக் கற்றலை மேம்படுத்த வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்றுள்ளோர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு தமிழை உயிரோட்ட மிக்க மொழியாக தமிழர்களுக்கு வழங்க முடியும் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+