அனைத்து விலையும் இனி உயரும்-ஏழைகள் வாழ்க்கை நடத்துவதே கஷ்டம்: விஜயகாந்த்
சென்னை: டீசல் விலை உயர்வால், பஸ் கட்டணங்கள், லாரி வாடகை, பால், காய்கறி, மளிகை பொருட்கள் விலை என்று பாமர மக்களுக்கு தேவைப்படும் இன்றியமையாப் பொருட்களின் விலை உயரக்கூடும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களும், நகர்ப்புற ஏழைகளும் பயன்படுத்தும் மண்எண்ணை விலையையும் கூட்டியுள்ளனர். இதனால் சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்துவது என்பதே இனி இயலாத காரியம் என்று சாடியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடி வருவதால் பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் என்று இந்திய அரசு விளக்கம் அளிக்கிறது. ஆனால் இதர நாடுகளில் இந்தியா அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாக இல்லை. பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பாதிக்கு மேல் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பே காரணம். உண்மையில் பெட்ரோலிய விலை உயர்வதால், அதோடு சேர்ந்து வரியும் உயர்வதால் ஆதாயம் அடைவது அரசுகள்தான்.
மக்கள் நலன் கருதி இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசு அடைகின்ற ஆதாயத்தை குறைத்து விலையை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?. இந்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் இந்திய அரசுக்கு ஏற்கனவே பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள வருவாயை விட, இப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எதிர்பாராத அளவிற்கு அரசுகளுக்கு வருவாய் கூடுகிறது.
பெட்ரோல் விலையில் சதவீத அடிப்படையில் வரி விதிக்கப்படுவதால் பெட்ரோல் விலை கூடும்பொழுதெல்லாம் அரசுக்கு வரி மூலம் வரும் வருமானமும் அதிகரிக்கிறது. சதவீத வரிக்குப் பதிலாக, ஒரே சீரான அளவில் அதாவது சமமாக இத்தனை ரூபாய் என்று வரி விதித்தால் அரசுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் வருமானம் மட்டுமே இல்லாமல் போகும்.
ஒரு குறிப்பிட்ட வரியை விதிப்பதற்குப் பதிலாக, சதவீத அடிப்படையில் வரி விதித்து அரசுகள் கொள்ளையடிப்பது என்ன நியாயம்?.
ஏற்கனவே விலைவாசி உயர்வு இரு மடங்கு ஆகியுள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அரசின் புள்ளி விவரமே கூறுகின்றது. இப்போது பஸ் கட்டணங்கள், லாரி வாடகை, பால், காய்கறி, மளிகை பொருட்கள் விலை என்று பாமர மக்களுக்கு தேவைப்படும் இன்றியமையாப் பொருட்களின் விலை உயரக்கூடும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களும், நகர்ப்புற ஏழைகளும் பயன்படுத்தும் மண்எண்ணை விலையையும் கூட்டியுள்ளனர். இதனால் சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்துவது என்பதே இனி இயலாத காரியம்.
உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலையை உழைக்கும் மக்களின் நலன் கருதி மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.