பெட்ரோல், டீசல் விலை உயர்வு அலை அலையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்-ராமதாஸ்
சென்னை: பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு என அனைத்து பெட்ரோலிய பொருட்களின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது சங்கிலி தொடர்போல அலை அலையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு என அனைத்து பெட்ரோலிய பொருட்களின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது சங்கிலி தொடர்போல அலை அலையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே, உயர்ந்து கொண்டே போகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவற்றின் விலை மேலும் உயர வழிவகுக்கும். அத்துடன் இதர அனைத்து நுகர் பொருட்களின் விலையையும் இது உயர்த்திவிடும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மீது புதிதாக ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் கிராமப்புற ஏழை எளிய குடும்பங்கள் மீது கூடுதல் சுமையை இந்த விலை உயர்வு ஏற்படுத்தும். ஏழை, எளிய மக்களின் நலன் கருதி மண்எண்ணை மற்றும் சமையல் எரிவாயு மீதான விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க மாநில அரசுகள் அவற்றின் மீதான விற்பனை வரியை குறைக்கலாம் என்று அண்மையில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த யோசனையை மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன், அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்ட சமையல் எரிவாயு உருளை மீதான மானியத்தை மீண்டும் வழங்கவும் மாநில அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications