தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு-பொன். ராதாகிருஷ்ணன்
ஓசூர்: தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓசூர் அடுத்த தளியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாக கட்சி மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த முறை ஆட்சியில் ஏழு முறை பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தினர். தற்போது, இது வரை மூன்று முறை பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தி உள்ளனர்.
இந்த விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விலை உயர்வு விஷம்போல் உள்ள நிலையில், மீண்டும் விலை உயர்ந்தால் சாதாரண மக்கள் வாழ்க்கை நிலை கேள்வி குறியாகும்.
பெட்ரோல், டீஸல் விலை உயர்வை வாபஸ் பெற கோரி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றது. குறிப்பாக இளைஞர்கள் அதிக அலிவில் கொலை செய்யப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். சமூக விரோத சம்பவங்களை தடுக்க முடியாத செயலற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே கோவையில் உலக தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துகின்றது. தமிழ் மொழிக்கு நாங்கள் உரிய மரியாதை எப்போதும் தருவோம். ஆனால், திமுக துதிபாடும் தமிழ் மாநாட்டை தான் எதிர்கிறோம்.
திமுக அரசு துதிபாடும், வாழ்த்து பாடும் மாநாடுகளை நிறுத்திவிட்டு, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications