சுதர்சனம் மறைவுச் செய்தி இடி தாக்கியது போல உள்ளது-கருணாநிதி
கோவை: சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்தின் மறைவுச் செய்தி இடி தாக்கியது போல உள்ளது என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
சுதர்சனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் உடைய தலைவராக மாத்திரமல்லாமல்; அந்த வட்டாரத்திலே உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கும் - எல்லாக் கட்சிகளின் செயல் வீரர்களுக்கும் நெருக்கமாக இருந்து பழகியவர் நண்பர் சுதர்சனம்.
ஏற்கனவே, உடல் நலிவுற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட விஷயத்தையே என்னிடத்தில் சொல்லாமல், சொன்னால் மாநாட்டிற்கு வருவதை தடுத்து விடுவேனோ என்று கருதி, மாநாட்டிற்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் அவருக்கு இத்தகைய நிலை ஏற்பட்டு, அதன் காரணமாக இத்தகைய சோக நிகழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
மிகுந்த மகிழ்ச்சியோடு மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும்போது இடி போன்ற இந்த செய்தியினால் நான் மிகவும் மனம் கலங்கியிருக்கிறேன். பல ஆண்டு காலமாக எனக்கும், அவருக்கும் நல்ல நட்புணர்வும், பழக்கமும் உண்டு. அரசியலில் நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் நடந்து கொள்ளக் கூடிய ஒரு நல்ல மனிதர் அவர். அவருக்கு இத்தகைய முடிவு ஏற்பட்டது எதிர்பாராதது.
இந்தத் தாக்குதல் அவருடைய குடும்பத்தாரின் நெஞ்சத்திலே மாத்திரமல்ல, என்னுடைய குடும்பத்தாரின் நெஞ்சத்திலும் ஏற்பட்ட தாக்குதலாகவே நான் கருதுகிறேன். அவருடைய குடும்பத்தாரும், மகன்களும் ஆறுதல் பெற வேண்டும் என்று அவர்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications